சென்னை: தமிழகத்தில் எந்தச் சூழ்நிலையிலும் குற்றங்கள் உருவாகாத நிலையை ஏற்படுத்தவேண்டும் என காவல்துறையினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கி, பாராட்டிப் பேசிய முதல்வர், "காவல்துறையினர் மக்களோடு நெருக்கமாக இருந்தால்தான் நாட்டில் குற்றங்கள் குறையும்," என்று கூறினார்.
எனவே, காவல்துறை நமது நண்பன் என்று சொல்லத்தக்க விதத்தில் காவலர்கள் செயல்படவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அமைதியான சூழ்நிலையில்தான் தொழில் வளர்ச்சி ஏற்படும் என்றும் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதால்தான் தொழில்துறையினர் வருவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

