பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு
மதுரையில் வசந்த விழா
மதுரை: உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு வருகிற ஜூன் 3ஆம் தேதி வசந்தவிழா உற்சவம் நடைபெறவுள்ளது.
இவ்விழாவைச் சிறப்பாக நடத்துவதற்காக, புது மண்டபத்தைச் சுற்றிலும் தண்ணீர் நிரப்பி வைப்பதற்காக படிக்கட்டுகளை உடைக்கும் பணி நடைபெற்றது. ஆனால், அங்கிருக்கும் 22 கடைக்காரர்கள் மட்டும் கடைகளைக் காலி செய்ய மறுத்துவிட்டனர்.
அதன்பின்னர், கோயில் நிர்வாகத்தினரும் கடைக்காரர்களும் பேச்சுவார்த்தை நடத்தி மண்டபத்தைச் சுற்றிலும் தண்ணீர் செல்ல தடையாக உள்ள இடத்தை மட்டும் காவல்துறையினர் உதவியுடன் கோயில் பணியாளர்கள் இடித்தனர்.
புது மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமிக்கு வெப்பத்தைத் தணிக்க அந்த மண்டபத்தைச் சுற்றிலும் தண்ணீர் நிரப்புவதற்காக இருக்கும் சிறிய அகழியைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
முடிவுற்றது கத்திரி வெயில்
சென்னை: இம்மாதம் 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதலே மக்களை வெயில் வாட்டி வதைத்தது. நேற்றுடன் இந்த கத்திரி வெயில் தமிழகத்தில் முடிவுற்றது. பரவலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது. வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாள்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழை நீடிக்கும். சென்னையில் மேகமூட்டமாகக் காணப்படும், மழை பெய்யவும் வாய்ப்புண்டு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
யானை தாக்கி இருவர் பலி
ஊட்டி: நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி அடுத்தடுத்து இருவர் உயிரிழந்ததால் அங்கு வசிக்கும் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதற்காக வந்த வனத்துறையினரை உடலை எடுக்கவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். "நாங்கள் வசிக்கும் பகுதியில் கடந்த சில நாள்களாகவே யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் தேநீர் கடைக்காரர் ஆனந்தகுமார் உயிரிழந்தார். அதன்பின்னர், யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளார். அடுத்தடுத்து இருவர் உயிரிழந்துள்ளதால் வீட்டை விட்டு வெளியில் வரவே எங்களுக்கு அச்சமாக உள்ளது. இங்கு சுற்றித் திரியும் யானையை கும்கி யானைகள் உதவியுடன் அடர்ந்த வனத்திற்குள் விரட்டவேண்டும்," என கோரிக்கை விடுத்தனர்.
பழனியில் நாணயக் கண்காட்சி
பழனி: பழனியில் தேசிய அளவிலான பழைய நாணயங்களின் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த நாணயங்கள் கண்காட்சியில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் கால நாணயங்கள், மற்றும் முகலாயர், பிரிட்டிஷ், விக்டோரியா காலத்து நாணயங்களும், சுதந்திர இந்தியாவின் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் வரை இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

