சேலம்: ஒரு பெட்டி தக்காளியைத் திருடிய இளையரை சேலம் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையின்போது தாம் ஏற்கெனவே ஆப்பிள் திருடிய குற்றத்துக்காக கைதான தகவலை அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளியின் விலை கிடுகிடு உயர்வு கண்டது. ஒரு கிலோ தக்காளி நூறு ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்பட்டது.
இப்போதெல்லாம் பெட்ரோல், ஆப்பிள், தக்காளி என்று எந்தப் பொருளின் விலை அதிகமாக உள்ளதோ அதை திருடுவது அதிகரித்துள்ளது. அந்த வகையில் சேலம் மாவட்டம், பெருமாகவுண்டம்பட்டியைச் சேர்ந்த 32 வயதான சின்ராஜ் (படம்) என்பவர் பல காய்கறிக் கடைகளில் இருந்து தக்காளியைத் திருடியுள்ளார்.
கடந்த சில தினங்களாக பெருமாகவுண்டம்பட்டி, புதுரோடு உள்ளிட்ட சேலத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளி அதிக அளவில் திருட்டுப் போனது. இது தொடர்பான புகார்களை காவல்துறையினர் விசாரித்து வந்தனர். கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, இளையர் ஒருவர் நன்கு உடையணிந்து, இருசக்கர வாகனம் ஒன்றில் வருவதும் காய்கறிக் கடைகளுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள தக்காளிப் பெட்டிகளை வாகனத்தில் ஏற்றிச் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. அந்த வாகனத்தின் பதிவெண்களைக் கொண்டு சின்ராஜை பிடித்தனர்.
இவர் ஏற்கெனவே ஆப்பிள் பெட்டியைத் திருடிய வழக்கில் கைதாகி உள்ளார். அண்மையில் பிணை பெற்று வெளியே வந்தவர், மீண்டும் திருட்டு வழக்கிற்காக பிடிபட்டுள்ளார்.

