ஓடுபாதையில் சென்றபோது கண்டுபிடித்த விமானி: 104 பேர் உயிர் தப்பினர்
சென்னை: சிங்கப்பூர் செல்லவிருந்த விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாற்றை விமானி கண்டுபிடித்ததால், சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் அந்த விமானம் நிறுத்தப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த 104 பேர் உயிர்தப்பினர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை இரவு 9.45 அளவில் விமானம் ஒன்று சிங்கப்பூர் செல்ல தயாரானது.
98 பயணிகள், 6 விமானப் பணியாளர்களுடன் அந்த விமானம் சிங்கப்பூர் செல்ல இருந்தது. விமானம் புறப்படத் தயாரானதும் அதன் கதவுகள் மூடப்பட்டன. பின்னர் விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது.
அப்போது எதிர்பாராத விதமாக விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஓடுபாதையில் விமானம் ஓடத்தொடங்கிய சில நொடிகளிலேயே விமானி அந்தக் கோளாற்றைக் கண்டுபிடித்துவிட்டார்.
இதனால் அந்த இடத்திலேயே விமானத்தை நிறுத்திய அவர், விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து, இழுவை வாகனம் மூலம் அந்த விமானம் மீண்டும் அதற்குரிய நடைமேடையில் நிறுத்தப்பட்டது.
அதிகாலை 2 மணிக்குள் இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்டு விமானம் புறப்படும் என அறிவிக்கபட்டதை அடுத்து, பயணிகள் அனைவரும் விமான நிலைய ஓய்வு அறைகளில் தங்கவைக்கப்பட்டனர்.
ஆனால், அதிகாலை 4 மணி ஆகியும், கோளாற்றை சரிசெய்ய முடியாததால் விமானம் புறப்படவில்லை. இதனால் கோபமடைந்த பயணிகள், விமான ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களைச் சமாதானப்படுத்திய ஊழியர்கள், தேநீரும் சிற்றுண்டியும் வழங்கினர்.
இந்நிலையில், பயணிகள் பலர் வீடு திரும்புவதாகக் கூறி, விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். சிலர் செய்வதறியாது பரிதவித்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை விமானத்தில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு 11.30 மணியளவில் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.