சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் அதனைத் தடுத்து நிறுத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்தும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் பன்முக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளாலும் மக்களின் ஒத்துழைப்பினாலும் தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்திய அளவில் பல மாநிலங்களில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் மீண்டும் அதி கரித்து வருகிறது.
இருந்தாலும் தமிழ்நாட்டில் பதிவாகும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைவாகவே உயர்ந்துள்ளது. சென்னை மாநகராட்சியைத் தொடர்ந்து, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு காணப்படுகிறது.
சென்னையில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் கொரோனா தாக்கம் காணப்பட்டது. இவை அனைத்தும், நிறுவனங்களின் உதவியுடன் அனைவருக்கும் முழுமையாக பரிசோதனை செய்தும் கொரோனா தாக்கம் இருந்தவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளித்தும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த ஆய்வின்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைவாகவே காணப் பட்டாலும் இதனை மேலும் உயராமல் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைக்கவேண்டும் என்றும் கொரோனா கட்டுப்பாட்டுப் பணிகளை சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை போன்ற துறைகளை ஈடுபடுத்தி உரிய நடவ டிக்கையை எடுக்க வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் கூறினார்.

