ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நள்ளிரவு நேரத்தில் நடந்த சாலை விபத்தை சீரமைக்கும் பணியில் இரு காவலர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, வேகமாக வந்த ஒரு சுற்றுலா வேன் மோதியதில் சிறப்பு காவல் உதவியாளர் உள்ளிட்ட இரு காவலர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ராசிபுரம் தேசிய நெடுஞ்சாலை யில் கடந்த சில நாள்களாக மேம்பாலம் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.
இதையடுத்து, அந்தப் பாதையில் வரும் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிடும் வகையில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து, தகர பீப்பாய்களை வைத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று ஞாயிறன்று அதிகாலையில் மதுரையில் இருந்து ஓசூர் நோக்கி அதிவேகமாக வந்த வேன் ஒன்று, மாற்றுப்பாதைக்கான எச்சரிக்கைப் பலகைகளைக் கவனிக்காமல் நேரே சென்று தடுப்புத் தட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து, சம்பவ இடத் துக்கு வந்த ராசிபுரம் காவல்துறை யினர் விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்து வந்தனர்.
அப்போது தஞ்சாவூரிலிருந்து இளம்பிள்ளை நோக்கிச் சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன், போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரு காவலர்கள் மீதும் வேகமாக வந்து மோதியது.
இதில், புதுச்சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர், தலைமைக் காவலர் தேவராஜன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் சுற்றுலாப் பயணி கள் பலரும் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து காவல் துறை அலுவலர்கள் நடத்திய விசாரணை யில், முதலில் விபத்துக்குள்ளான கார் மதுரையில் இருந்து வந்ததாகவும் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்துடன் வந்ததால் தடுப்பு வேலியில் மோதி நின்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப் படுத்த வந்த ராசிபுரம் காவல் துறையைச் சேர்ந்த தேவராஜ், சந்திரசேகர் இருவரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கும்போது, அதிவேகமாக வந்த லாரியை நிறுத்தி விசாரித்ததில் ஓட்டுநர் குடிபோதையில் இருந்துள்ளார். அவரை கீழே இறங்கச் சொல்லி பேசிக் கொண்டிருக்கும்போது திருநள்ளாரில் இருந்து இளம்பிள்ளை நோக்கி வந்த சுற்றுலா வேன் காவலர்கள் மீது அதி பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து விசாரணை தொடர்கிறது.
இதற்கிடையே, விபத்தில் உயிரிழந்த இரண்டு காவலர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

