சென்னை: அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அக்கட்சியின் தலைமையகம் முன்பு தொண்டர்கள் முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் எதிர்வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் 2,900க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
அதில், பொதுக்குழுவில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள், சசிகலா விவகாரம், யார் யார் பேசுவது என்பது குறித்தெல்லாம் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக, சசிகலாவின் ஆதரவாளர்களும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களும் தேர்தல் தோல்வி குறித்து கேள்விகள் எழுப்பினால் அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்கபட்டதாகவும் கூறப்படுகிறது.
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவது என இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதிமுக தலைமையகத்துக்கு வெளியே, திரளாக கூடிய தொண்டர்கள் பலர் கட்சிக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என இரண்டாகப் பிரிந்து முழக்கங்களைத் தொடர்ந்தனர். கட்சித் தலைமையகத்துக்கு வெளியே இருதரப்பினருக்கும் உள்ள கோஷ்டி மோதலை பகிரங்கமாக வெளிப்படுத்தும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

