சென்னை: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை புழல் சிறையில் உதவி சிறை அதிகாரியாகப் பணியாற்றி வரும் ஷாலினி இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். ஷாலினி நீலகிரியைச் சேர்ந்தவர்.
அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்துள்ளார். எனினும், அவர் வசித்த பகுதியில் மேல்நிலை வகுப்புகள் இல்லை. அதனால் நீலகிரி மாவட்டம் அருகே உள்ள கேரளாவில் பள்ளியில் ஆங்கில வழியில் 11, 12ஆம் வகுப்புகளைப் படித்து முடித்தார்.
பின்னர் தமிழ் வழியில் படித்ததற்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், இவருக்கு சிறைத்துறை அதிகாரியாக வேலை கிடைத்துள்ளது.
இந்நிலையில், அடுத்த கட்டமாக தமிழக அரசின் 'குரூப்-2' தேர்வு எழுத தயாரான ஷாலினி, அதற்காக விண்ணப்பித்தபோது, தமிழக அரசின் புதிய சட்டத்திருத்தத்தின்படி, அனைத்து வகுப்புகளிலும் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, அவர் உயர் நீதிமன்றத்தை அணுகினார். புதிய சட்டத்திருத்தத்தால் தமது அடிப்படை உரிமை பாதிக்கப்படுவதாக அவர் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இதற்கு அரசுத் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும், மதுரை உயர் நீதிமன்றக் கிளை இதே கோரிக்கையுடன் தொடுக்கப்பட்ட வழக்கை ஏற்கெனவே தள்ளுபடி செய்ததைச் சுட்டிக்காட்டியது.
இதையடுத்து, ஷாலினியின் மனுவை தள்ளுபடி செய்வதாக உயர் நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

