சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், அது குறித்த முடிவை எடுப்பதில் உச்ச கட்ட குழப்பம் நிலவி வருகிறது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசித்து வருகின்றனர்.
முன்னதாக பழனிசாமியின் ஆதரவாளர்களான திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் இருவரும் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் சந்தித்து, ஒற்றைத் தலைமை முறையை ஏற்றுக்கொள்ளும்படி வலியுறுத்தினர்.
"ஓபிஎஸ் கடந்த காலங்களில் முதல்வர் வேட்பாளர் பதவி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஆகியவற்றை விட்டுக்கொடுத்து தியாகம் செய்துள்ளார். இனியும் அவர் தியாகம் செய்யமாட்டார்," என்று கூறினர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
இதையடுத்து, அதிமுகவின் அவைத் தலைவர் பதவி, வழிகாட்டுதல் குழுத் தலைவர் பதவி ஆகிய முக்கிய பதவிகளைக் கொடுப்பதாகக் கூறி பழனிசாமியும் அவரது ஆதரவாளர்களும் புதிய சமரச திட்டத்துக்கு தூதுவிட்டனர்.
ஆனால், இவற்றையும் ஏற்க ஓபிஎஸ் மறுத்துவிட்டார்.
தனது அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை என்றும் இதே பதவியில் தொடர்ந்து செயல்பட விரும்புவதாகவும் அவர் திட்டவட்ட மாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், அதிமுகவில் ஒற்றைத் தலைமை முறையைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் காட்டும் பழனிசாமி தரப்பினர், நேற்று வியாழனன்று மூன்றாவது நாளாக ஓபிஎஸ் தரப்பினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனிடையே, ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ள அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ், "ஜெயக்குமார் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் அல்ல. உட்கட்சி விவகாரத்தை ஊடகங்களுக்குச் சொல்வதற்கு அவருக்கு யார் அதிகாரம் கொடுத் தது?" என்று வினவினார்.
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது ஆதரவு பழனிசாமிக்குத்தான் என்றார்.
"ஒற்றைத் தலைமை முறைதான் கட்சி நிர்வாகத்துக்கு நல்லது. இரட்டைத் தலைமையில் முடிவுகள் எடுப்பதில் தாமதமும் குழப்பமும் ஏற்படுகிறது. அதிமுக பொதுக்குழு வரும் 23ஆம் ேததி கூட்டப்பட உள்ள நிலையில், அதற்குள் சுமூக முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கிறோம்," என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர்கள் திரு தளவாய் சுந்தரம், திரு ஓ.எஸ்.மணியன், திருமதி வளர்மதி ஆகியோர் ஒற்றைத் தலைமை குறித்து சுமூக முடிவு எடுக்கப்படும் என்றனர்.
ஆனால், "அதிமுகவில் ஒற் றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை," என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். "அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி உள்பட யாரும் வரவே முடியாது. இதற்கு சட்டத்தில் இடமில்லை. இரட்டைத் தலைமைதான். ஒற்றைத் தலைமை கிடையாது," என அவர் உறுதிபட குறிப்பிட்டுள்ளார்.

