கோவை: மீண்டும் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து கோவையில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.
குழந்தை திருமணங்களை ஊக்குவிப்போர் மீதும் உ தவுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக நலத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் மட்டும் கோவையில் 146 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளதாக வழக்குப் பதிவாகி உள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை 46 திருமணங்கள் நடந்துள்ளன.
கொரோனா வேளையில் குறைந்திருந்த குழந்தை திருமணங்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது கவலைக்குரிய விஷயமாகி உள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நடந்துள்ள 192 குழந்தை திருமணங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
"குழந்தை திருமண சட்டப்படி மணமகன், பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், திருமண மண்டப உரிமையாளர் என சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்.
"இந்தக் குற்றத்துக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டணையும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். ஆனால் இதை அறிந்தும் சிலர் இத்தகைய குற்றத்தில் ஈடுபடுகிறார்கள்," என்று கோவை சமூக நலத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதையடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று குழந்தை திருமணங்கள் கூடாது என்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

