அதிமுகவில் மாவட்ட செயலாளர்களை வளைக்க முயற்சி
சென்னை: அதிமுகவில் வெடித்துள்ள உட்கட்சிப்பூசல் நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது. இதையடுத்து கட்சியின் மாவட்டச் செயலாளர்களின் ஆதரவைப் பெறுவதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.
எதிர்வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாகவே பெரும்பான்மை மாவட்ட செயலாளர்களின் ஆதரவைப் பெற்றுவிட வேண்டும் என இரு தரப்பினரும் காய்களை நகர்த்தி வருகின்றனர்.
பொதுச்செயலாளர் பதவியைப் பிடிக்க எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்து வருவதாகக் கூறப்படும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அவருக்கு கடும் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்த ஜெயலலிதா காலமான பின்னர் அந்தப் பதவியில் அமர தங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறி, ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து கட்சியை வழி நடத்தி வருகிறார்கள்
கட்சி சார்ந்த முடிவுகளை இருவரும் கலந்தாலோசித்த பிறகே எடுக்கின்றனர். எனினும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என்ற முணுமுணுப்பு தொடங்கியது.
இருவரும் சேர்ந்து முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்றும் இதனால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் நிர்வாகிகள் பலர் வெளிப்படையாகப் பேசத் தொடங்கினர்.
எனவே கட்சியின் எதிர்கால நலனுக்கு ஒற்றைத் தலைமையே சரியாக இருக்கும் என்று பழனிசாமி தரப்பு கூறி வருகிறது. ஆனால் பன்னீர்செல்வம் தரப்பு தற்போதுள்ள ஏற்பாடே நீடிக்க வேண்டும் என்கிறது.
எதிர்வரும் பொதுக்குழு கூட்டத்தின்போது பழனிசாமியை கட்சியின் தலைமைப் பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்பதே அவரது ஆதரவாளர்களின் திட்டம் என்றும் இதனால் பன்னீர்செல்வம் தரப்பு கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பழனிசாமி தரப்பு தம்மிடம் கலந்தாலோசிக்காமலேயே ஒற்றைத் தலைமை குறித்து பேசி வருவதாகவும் அவ்வாறு பேசுபவர்கள் மீது பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.
"எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வெற்றி பெறுவதற்கு நான்தான் காரணம். எனது ஆதரவாளர்களுடன் கட்சியில் சேர்ந்தபோது இரட்டை தலைமை பற்றி திடீரென என்னிடம் கூறினர்.
"கட்சியின் நலன் கருதி அதற்கு நான் அப்போது ஒப்புக்கொண்டேன். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் 23ஆம் தேதிக்குள் சுமூக முடிவு எட்டப்பட வேண்டும் என்று நான் கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறேன்," என்று நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசும்போது பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தனது ஆதரவாளர்களுடன் கடந்த நான்கு தினங்களாக அவர் சென்னையில் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து அவரது ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அவரும் தன் பங்கிற்கு ஆதரவாளர்களுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
"மாவட்ட செயலாளர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் கட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடலாம் என்றுதான் இரு தரப்பினரும் கணக்குப்போட்டுள்ளனர். ஆனால், மாவட்ட செயலாளர்களில் இருவரது நீண்ட நாள் ஆதரவாளர்கள் மட்டுமே வெளிப்படையாக தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
"மற்ற மாவட்ட செயலாளர்கள் இரு தரப்பினரும் ஒற்றுமையாக அழைப்பு விடுத்தால் மட்டுமே பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வோம் என்று கூறியுள்ளனர். எதிர்வரும் 23ஆம் தேதி அதிமுகவில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்," என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அக்கட்சித் தொண்டர்களோ, என்ன நடக்கிறது, அதன் பின்னணி என்ன, அடுத்து என்ன நடக்கும் என்பது புரியாமல் குழப்பத்திலும் கவலையிலும் உள்ளனர் என்றும் அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

