மாமல்லபுரம்: ஆசியா கண்டத்திலேயே 2,000க்கும் மேலான முதலைகள் பராமரிக்கப்படும் பண்ணையாக வடநெம்மேலி முதலைப் பூங்கா திகழ்ந்து வருகிறது.
இங்கிருந்து 1,000 முதலைகளைக் குஜராத்திற்கு இடமாற்றம் செய்வதை எதிர்த்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஏ.விஸ்வநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சரியான விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரம், வடநெம்மேலியில் உள்ள முதலைப் பூங்காவில் 17 ரகங்களைச் சேர்ந்த 2,000க்கும் மேலான முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த முதலைகளுக்கு நாள் ஒன்றுக்கு கோழி, மாட்டு இறைச்சி என 500 கிலோவுக்கும் மேல் உணவு வழங்கப்பட்டு வந்தது.
இச்சூழலில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் பூங்கா பூட்டப்பட்டு கிடந்தது.
இதனால், வருமானமின்றி முதலைகளின் பராமரிப்புச் செலவு, ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட நிதிப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமல் முதலைப் பண்ணை நிர்வாகத்தினர் திண்டாடி வந்தனர்.
இதையடுத்து, இங்கிருந்த 1,000 முதலைகளை விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திற்குக் கடிதம் அனுப்பினர்.
இதனை ஏற்றுக்கொண்ட மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், ஆயிரம் முதலைகளை இங்கிருந்து குஜராத்திற்கு இடமாற்றம் செய்ய அனுமதி வழங்கியது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து அரசின் வனவிலங்கு காப்பாளர், மத்திய வன உயிரின ஆணையம், குஜராத்தில் உள்ள கிரீன்ஸ் வனவிலங்குகள் மையம், மாமல்லபுரம் முதலைப் பூங்கா நிர்வாகம் உள்ளிட்டோர் மூன்று வாரங்களில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

