இலங்கைத் தமிழர்கள் ஏழு பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை
இரு குடும்பத்தைச் சேர்ந்த ஏழு இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு படகில் வந்து சேர்ந்தனர். காவலர்களின் முதற்கட்ட விசாரணையில், வருமானமின்றி மிகவும் சிரமப்பட்டதால் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்ததாகவும் தங்க நகைகளைப் படகுக் கட்டணமாகக் கொடுத்ததாகவும் தெரிவித்தனர். பின்னர், மண்டபம் முகாமுக்கு அனுப்பப்பட்டனர். படம்: ஊடகம்
'மலைப்பகுதியில் ஓராண்டுகாலம்
பணிபுரிவது கட்டாயம்'
கோவை: மலைப்பகுதிகள் அதிகமுள்ள மாவட்டங்களில் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ஓராண்டு காலம் கட்டாய மாகப் பணியாற்றவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மலைப்பகுதிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் தயக்கம் காட்டுவது காரணமாக அரசு இந்நடவடிக் கையை எடுத்துள்ளது. மலைப்பகுதிகள் நிறைந்த ஈரோடு, தேனி, சேலம், தர்மபுரி, வேலூர், திண்டுக்கல், திருப்பத்தூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள 20 கல்விக்கூடங்களில் ஆசிரியர்கள் ஓராண்டு காலத்திற்கு சுழற்சி முறையில் கட்டாயம் பணியாற்றவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரேமலதா: தேமுதிகதான்
உண்மையான எதிர்க்கட்சி
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே நடைபெற்ற ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசியபோது, "தமிழகத்தில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்படுபவர்கள் உயிரிழக்கும் நிலைமை மோசமாகி வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும்," என்றவர், "தேமுதிகதான் சிறந்த எதிர்க்கட்சியாக விளங்குகிறது. மக்கள் பிரச்சினைக்காக யார் குரல் கொடுத்து ஆளும் கட்சியினரிடம் அந்தப் பிரச்சினைகளைக் கொண்டு செல்கிறார்களோ அவர்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி. அந்த வகையில் மக்களின் எல்லா பிரச்சினைகளுக்கும் முதல் ஆளாக, முதல் கட்சியாக தேமுதிகதான் குரல் கொடுத்து வருகிறது," என்றார்.
மு.க.ஸ்டாலின்: 80% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் மூத்த நிர்வாகிகளுக்குப் பொற்கிழிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, திருவள்ளூர் மாவட்ட மூத்த முன்னோடிகள் 500 பேருக்கு தலா 10,000 ரூபாயும் புத்தாடையையும் வழங்கிப் பேசிய முதல்வர், "திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 80% நிறைவேற்றப்பட்டு உள்ளது. மீதமுள்ள 20% விரைவில் நிறைவேற்றப்படும்," என்றார்.
'கிருமிப் பரவல் அதிகரித்தாலும்
கட்டுப்பாடு விதிக்கும் சூழலில்லை'
செங்கல்பட்டு: தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 600ஐ நெருங்கியது. இவர்களில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ஒரே நாளில் 286 பேருக்கு தொற்றுப் பாதிப்பு உறுதியானது. கொரோனா பாதிப்பு நாளும் அதிகரித்து வந்தாலும் கட்டுப்பாடுகள் விதிக்கும் சூழல் ஏற்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கிருமிப் பரவல் 10 விழுக்காட்டைத் தாண்டும்போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என மத்திய அரசு விதிமுறை வகுத்துள்ள நிலையில், தமிழகத்தில் கிருமிப் பரவல் பாதிப்பு விகிதம் இரண்டு மூன்று விழுக்காட்டுக்குள்ளேயே உள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.

