சேலம்: சேலத்தில் பிரசவ வலி ஏற்பட்ட மனைவிைய மருத்துவ மனைக்கு அழைத்துச்செல்லாமல் கணவனே பிரசவம் பார்த்ததில், தாய்-சேய் இருவரும் உயிரிழந்தனர். கணவன் பூபதி கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சேலம் மாவட்டம், சீலநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் பார்வதி, 35. இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி 12 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், கணவனை விட்டுப் பிரிந்து தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், பார்வதிக்கும் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பூபதி என்ற 25 வயது இளையருக்கும் திருமணமாகி சீலநாயக்கன்பட்டி யில் வீடு எடுத்து வசித்து வந்தனர். இருவரும் கட்டட வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வந்தனர். இவர்களுக்கு 3 வயதில் ஆண், 2 வயதில் பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே, பார்வதி மூன்றா வது முறையாக கர்ப்பமாக இருப்பது தெரியவந்தால் உறவினர்கள் ஏதாவது சொல்வார்கள் என நினைத்து கணவன், மனைவி இருவரும் உறவினர்களுக்குத் தெரிவிக்காமல் மறைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் எட்டு மாத கர்ப்பிணியான பார்வதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
பூபதி, தனது மனைவியை வீட்டின் அருகில் உள்ள மலையடிவார கரடு பகுதிக்கு அழைத்துச் சென்று பிரசவம் பார்த்ததில் பார்வதிக்கு பெண் குழந்தை இறந்தே பிறந்ததாகக் கூறப்படுகிறது. குழந்தையைக் குழி தோண்டி புதைத்துள்ளார். அதன்பின்னர், பார்வதிக்கும் திடீரென வலிப்பு ஏற்பட்டு அவரும் உயிரிழந்தார்.

