தூத்துக்குடி: பொருளியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு தமிழக மக்களின் சார்பில் இரண்டாவது முறையாக அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இம்முறை 15,000 மெட்ரிக் டன் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கடந்த மே மாதம் 18ஆம் தேதி ரூ.30 கோடி மதிப்பிலான அரிசி, ஆவின் பால் பவுடர், அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் அனுப்பப்பட்டன.
இதையடுத்து நேற்று இரண்டாம் கட்டமாக மேலும் பல பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவற்றின் மதிப்பு ரூ.67.70 கோடி என்றும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
நேற்று தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சரக்கு கப்பல் மூலம் இப்பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இம்முறை உயிர்காக்கும் மருந்துப் பொருள்கள், பால்பவுடர், 14,172 டன் அரிசி ஆகியவை இந்த உதவித்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
இலங்கை செல்லும் கப்பலை சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.