புதிய கல்விக்கொள்கை தேவையில்லை என உயர் நீதிமன்றத்தில் அரசு மனுத்தாக்கல்
சென்னை: இந்திய அளவில் கல்வித்துறையில் தமிழகம் 15 ஆண்டுகள் முன்னோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
எனவே தமிழகத்துக்கு புதிய தேசிய கல்விக் கொள்கை அவசியம் இல்லை என்றும் அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரி கடலூரைச் சேர்ந்த அர்ஜுனன் இளையராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த மனுவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது.
அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உயர் கல்வி, பள்ளிக்கல்வித் துறை செயலாளர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கல்வி என்பது மாநிலக் கொள்கை சார்ந்தது என்றும் தேசிய கல்விக் கொள்கை என்பது எந்தவித சட்டபூர்வ அங்கீகாரமும் இல்லாத வரைவுக் கொள்கையாக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை விகிதத்திலும் கல்வித் தரத்திலும் இந்திய அளவில் தமிழகம் 15 ஆண்டுகள் முன்னோக்கி சென்று கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, தாய்மொழிக் கல்வி மிக முக்கியம் எனச் சுட்டிக்காட்டி உள்ளது.
"தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீடு, பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு, அரசு வேலையில் தமிழில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு என அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து சமத்துவமான கல்வி என்ற அடித்தளத்தை கொண்டுள்ள மதச்சார்பற்ற தமிழகத்தில், இரு மொழிக்கொள்கையும் தாய்மொழியில் அடிப்படைக் கல்வியும் முக்கியத்துவம் வாய்ந்தது," என்று தமிழக அரசின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய அளவில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை 27.1% என்பதில் இருந்து 2035க்குள் 50 விழுக்காடாக உயர்த்தும் எண்ணத்தில் தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, தமிழகத்தில் தரமான இலவசக்கல்வி, மதிய உணவு, இலவச புத்தகம், சீருடை, மிதிவண்டி, காலணி, மடிக்கணினி, கல்வி உதவித்தொகை வழங்குவதால் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் தற்போது 51.4 விழுக்காடாக உள்ளதென சுட்டிக்காட்டி உள்ளது.

