சென்னை: கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதையடுத்து, கோயம்பேடு சந்தையில் உள்ள அனைத்து வியாபாரிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக சந்தையில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய கொரோனா கட்டுப்பாடுகளை அறிவித்து, அவை முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என கோயம்பேடு அங்காடி நிர்வாகக் குழு கண்காணித்து வருகிறது.
கோயம்பேடு சந்தையில் சுமார் நான்காயிரம் கடைகள் உள்ளன. அவற்றில் காய்கறி, பழம், பூ, மளிகைப் பொருள்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்கப்படுகின்றன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் தினமும் இந்தப் பொருள்கள் சந்தைக்கு வருகின்றன.
கொரோனா தொற்றுப் பரவல் உச்சத்தில் இருந்தபோது கோயம்பேடு சந்தையில் ஏராளமான வியாபாரிகளும் தொழிலாளர்களும் தொற்றுக்கு ஆளாகினர். அவர்கள் மூலம் சந்தைக்கு வந்த பொதுமக்களுக்கும் தொற்று பரவியது.
இதையடுத்து அந்தச் சந்தை ஐந்து மாதங்களுக்கு மூடப்பட்டது.
இம்முறை அத்தகைய நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தை வியாபாரிகளுக்கு பரிசோதனை நடத்தப்படுவதாக சென்னை மாநகராட்சியின் மண்டல சுகாதார அதிகாரி கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தினமும் இருநூறு பேருக்கு பரிசோதனை நடத்தப்படுவதாக அவர் கூறினார். மேலும், முகக்கவசம் அணிவது, கடை முன்பு கிருமிநாசினி வைப்பது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை வியாபாரிகள் பின்பற்ற வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.

