திருவள்ளூர்: நெமிலி அகரம் கிராமத்தில் உள்ள மூன்று அம்மன் கோயில்களின் பூட்டை உடைத்து 24 சவரன் நகைகளையும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள உண்டியல் காணிக்கையையும் கொள்ளையடித்துச் சென்ற சந்தேகப் பேர்வழிகளைக் காவலர்கள் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், நெமிலி அகரம் கிராமத்தில் கடம்பாடியம்மன் கோயில் உள்ளது.
வழக்கம்போல் கோயிலைத் திறக்க பூசாரி வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பைதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அம்மன் கழுத்தில் இருந்த ஏழு சவரன் சங்கிலி கொள்ளை போய் இருந்தது. உண்டியலை உடைத்து இரண்டு லட்சத்துக்கும் மேலான பணத்தைக் களவாடி உள்ளதாக கோயில் நிர்வாகிகள் கூறினர்.
அதே கிராமத்தில் உள்ள செல்லாத்தம்மன் கோயில் பூட்டை உடைத்து, அம்மன் கழுத்தில் இருந்த 10 சவரன் நகை, உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
அதேபோல், ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள பாப்பாத்தி அம்மன் கோயிலின் பூட்டையும் உடைத்து ஏழு சவரன் நகை, உண்டியல் பணத்தைக் கொள்ளை அடித்துள்ளனர்.
ஒரே நாளில், ஒரே பாணியில் மூன்று அம்மன் கோவில்களில் கொள்ளை நடந்துள்ளது. மூன்று கோயில்களிலும் சேகர் என்பவர்தான் பூசாரியாக உள்ளார். இந்தக் கோயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கவில்லை. விசாரணை நடக்கிறது.