சென்னை: ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுக தற்போது இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை இரவு தொடங்கி விடியவிடிய நடைபெற்ற சட்டப் போராட்டத்துக்குப் பிறகு கூடிய அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் பெரும் குழப்பத்துடன் முடிந்தது. கூட்டத்தில் பெரும்பாலானோா் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் (இபிஎஸ்) ஆதரவாளராக இருந்தனா். அவர்கள் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தை (ஓபிஎஸ்) கடுமையாக விமா்சித்து முழக்க மிட்டனா்.
ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தைப் புறக்
கணித்து வெளியேறியபோது ஓபிஎஸ் மீது போத்தல் வீசப்பட்டது. உறுப்பினராக இல்லாத 600 பேர் கூட்டத்தின் முன்வரிசையில் அமர வைக்கப்பட்டதே இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்று ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் நேற்று தெரிவித்தார்.
ஜூலை 11ஆம் தேதி மீண்டும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறுகிறார். ஆனால், கே.பி.முனுசாமி, டி. ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட இபிஎஸ் ஆதரவாளர்கள் பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்று அடித்துக் கூறுகின்றனர். அமைதியாக இருந்த அதிமுக, ஒற்றைத் தலைமை விவகாரத்தால் தற்போது இரண்டாகப் பிரிந்துள்ளது. இருதரப்பிலிருந்தும் எதிரெதிர் கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. வார்த்தைப்போர் முற்றிவருகிறது.
மேலும், பல்வேறு மாவட்டங்களில் அதிமுக அலுவலகங்களில் ஓபிஎஸ் படங்கள் அகற்றப்பட்டும் பதாகைகளில் உள்ள அவரது படங்கள் அழிக்கப்பட்டும் வருகின்றன. நாகை. போடி உள்ளிட்ட இடங்களில் இபிஎஸ்ஸுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த மாவட்டங்களில் உள்ள அதிமுக அலுவலகங்களில் இபிஎஸ் படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகையில், "அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும். அது எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இருக்க வேண்டும் என்று தொண்டா்கள் விரும்புகின்றனா். அது ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவில் செயல் வடிவத்துக்கு வரும்," என்றார்.
ஜெயக்குமார்: ஜூலை 11ல் பொதுக்குழு கூடும் - வைத்திலிங்கம்: பொதுக்குழு கூடாது

