ராமேஸ்வரம்: 70 வயது மதிக்கத் தக்க இலங்கைத் தம்பதியர், தனுஷ்கோடி அருகே கடற்கரையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டனர்.
இலங்கையிலிருந்து நள்ளிரவில் கள்ளப் படகு மூலம் தமிழகக் கரையோரம் வந்திறங்கிய இந்த முதிய தம்பதிகள் உணவு, குடி நீரின்றி சுயநினைவின்றி இருந்தனர்.
திருகோணமலையைச் சேர்ந்த இவர்கள், பிளாஸ்டிக் படகில் தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில் அருகே உள்ள மணல் திட்டை வந்தடைந்ததாகவும் கரையை அடைந்ததும் தம்பதியர் மயங்கி விழுந்ததாகவும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்த கடற்படை காவல்துறையினர், தம்ப தியை மீட்டு, அவர்களுக்கு முதலு தவி அளித்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த தம்பதியரைப் போல் கடந்த சில நாள்களில் மட்டும் இலங்கையைச் சேர்ந்த 85 பேர் கடல்மார்க்கமாக அகதிகளாக படகுகள் மூலம் தமிழகத்துக்கு வந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் மீட்கப் பட்டு மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக கடும் விலை வாசி உயர்வால், அங்கிருக்கும் மக்கள் வருமானமின்றி, வாழ்க்கையை இலகுவாக கொண்டுசெல்லமுடியாமல் தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அகதிகளாகச் செல்கின்றனர்.
அப்படி வந்தவர்களின் உயிரைக் காப்பாற்றுவதில் காவலர்களும் அதிகாரிகளும் மனிதாபிமானமற்ற முறையில் அலட்சியமாக செயல்பட்டது வேதனை அளிப்பதாக அந்தப் பகுதி மீனவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மூன்று மணி நேரத்துக்குப் பிறகே தம்பதியர் மீட்கப்பட்டதாகவும் கூறினர்.
"அவர்கள் எப்படி இங்கு வந்தார்கள், எப்போது வந்தார்கள் என்ற விவரம் அவர்கள் சுயநினைவுக்கு வந்தபிறகே தெரியவரும்," என்று கடற்படை காவல்துறையினர் தெரிவித்தனர்.