சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை விடாது வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர் பில் ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து யார் ஒருவர் மேல்முறையீடு செய்தாலும் தங்களது கருத்தையும் கேட்கவேண்டும் என்றும் தங்கள் தரப்பினரைக் கேட்காமல் உத்தரவைப் பிறப்பிக்கக் கூடாது எனவும் மனுவில் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இதனிடையே, கட்சியின் எதிர்காலத்தைக் கருதித்தான் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் தொண்டர்களும் நிர்வாகிகளும் அணிவகுப்பதாக திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். அண்மையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அவமரியாதை ஏற்பட்டுள்ள சூழலில், கட்சியை விட்டு ஓபிஎஸ் ஒதுங்கிக்கொள்வதுதான் நல்லது என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருந்த பெரம்பலூர் ஒன்றியச் செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் தலைமையிலான ஒன்பது பொதுக்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவு தெரிவித்து அணி மாறியுள்ளனர்.
இதன்மூலம் ஜூலை 11ல் பழனிச்சாமி தரப்பு எடுக்கும் முடிவுக்கு மொத்தமுள்ள 2,665 பேரில் 2,432 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, ஜூன் 23ல் நடந்த அதிமுக பொதுக்குழுவில் உயர் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்ட தாக பழனிச்சாமிக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். உயர்நீதிமன்றம் அனுமதித்த தீர்மானங்களை அதி முக பொதுக்குழு நிராகரித்தது நீதிமன்ற அவமதிப்பு எனவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜூலை 11ல் சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்திலேயே மீண்டும் பொதுக்குழுவை நடத்த அதிமுக முடிவு செய்துள்ள நிலையில், சசிகலா-ஓபிஎஸ் இருவரும் ஒரே அணியில் திரளவேண்டும் என்று தென்மாவட்ட நிர்வாகிகள் பலரும் கோரிக்கை விடுக்கத் தொடங்கி உள்ளனர்.

