கன்னியாகுமரி: மாநிலம் முழுவதும் உள்ள கடற்கரைப் பகுதிகளில் நேற்று பாதுகாப்பு ஒத்திகைப் பயற்சி தொடங்கியது. இப்பயிற்சி இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
கடலோரக் காவல்படையினரும் உள்ளூர் சட்டம்-ஒழுங்கு காவல் துறையினரும் இணைந்து 'சாகர் கவாச்' என்னும் கடல் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சியை நடத்தினர்.
பயங்கரவாதிகள் போல வேடமிட்டு கடல்வழியாக ஊடுருவும் கடலோரக் காவல்படையினரை உள்ளூர் காவல்துறையினர் மடக்கிப் பிடிக்கவேண்டும் என்பதுதான் இந்த ஒத்திகையின் உத்தரவு.
இதன்படி, கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரையிலான கடலோரப் பகுதிகளில் பயங்கரவாதிகள் போல் ஆயுதங்களுடன் ஊடுருவிய கடலோரக் காவல்படையினரை உள்ளூர் காவல்துறையினர் பிடித்தனர்.
கன்னியாகுமரி கடல் பகுதியில் மூன்று அதிநவீன சுற்றுக்காவல் படகுகளில் சென்று பயங்கரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்க கடலோரக் காவல்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
குமரியில் உள்ள 42 கடற்கரை கிராமங்களிலும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மும்பையில் கடந்த 2008ல் பயங்கரவாதிகள் கடல் வழி புகுந்து தாக்குதல் நடத்தினர். அதன்பிறகு, மத்திய அரசு அறிவுறுத்தலின்படி கடலோரப் பாதுகாப்பை மாநில அரசு கள் பலப்படுத்தி வருகின்றன.