சென்னை: தமிழ்நாட்டின் மிக முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக உள்ளாட்சி இடைத்தேர்தலை புறக்கணித்துவிட்டது.
அதிமுகவுக்கு யார் தலைமை ஏற்பது என்ற பிரச்சினை தொடர்பில் அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களான எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையில் இன்னமும் இணக்கம் ஏற்படாமல் இருப்பதே இதற்கான காரணம்.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த 510 பதவிகளுக்கு ஜூலை 9ல் இடைத்தேர்தல் நடக்கிறது.
அந்தப் பதவிகளில் 34 பதவி களுக்குக் கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் திரும்பப் பெற நேற்று இறுதி நாளாக இருந்தது.
ஆனால் அதிமுக தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து படிவங்களில் யார் கை யெழுத்திடுவது என்பதன் தொடர்பில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவருக்கும் இடையில் இணக்கம் ஏற்படவில்லை. நேற்று மாலை 3 மணிக்கு முன்பு படிவங்களைத் தாக்கல் செய்தால்தான் அதிமுகவின் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் நிலவியதால் உள்ளாட்சித் தேர்தலையே அதிமுக புறக்கணித்துவிட்டதாக தகவல்கள் கூறின.
மயிலாடுதுறை, தஞ்சாவூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல நகர்களையும் சேர்ந்த வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கவில்லை.
என்றாலும் கவுன்சிலர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட இதர பல ஊராட்சி பதவி இடங்களுக்கு அதிமுக சார்பில் போட்டியிட பலரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
ஆனால், அவர்களும் படிவங்களைத் தாக்கல் செய்யாத நிலை யில், சுயேச்சை வேட்பாளர்களாகவே அவர்கள் கருதப்படுவார்கள் என தகவல்கள் கூறின.
இதனிடையே, ஜூலை 11ஆம் தேதி நடக்கவிருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்குத் தடை விதிக்க இயலாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கூட்டத்திற்கான ஏற்பாடுகள் சூடுபிடித்துள்ளன.

