சென்னை: கொரோனா நெருக்கடியும் கட்டுப்பாடுகளும் குறைந்ததை அடுத்து, சொந்த வீடு வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளதாக இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான 'கிரெடாய்' தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதன் சென்னை பிரிவுத் தலைவர் சிவகுருநாதன், தமிழகத்தில் வீடுகளின் விலை அடுத்த மூன்று மாதங்களில் 15 விழுக்காடு அதிகரிக்கும் என்றார்.
கட்டுமானப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதாகவும் அதன் காரணமாக செலவுகள் அதிகரித்துள்ளன என அவர் குறிப்பிட்டார்.
"ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்ந்துள்ளதால் சொந்த வீடு வாங்க நினைக்கும் மக்கள் அது குறித்து விசாரிக்கத் துவங்கி உள்ளனர்.
"இதனால் புதிய வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. கட்டுமானப் பணிகள் முடிந்து விற்காமல் தேங்கிய வீடுகளின் விற்பனை அதிகரித்துள்ளது," என்றார் சிவகுருநாதன்.
நடப்பாண்டில் ஜூலை தொடக்கம் வரையிலான காலகட்டத்தில், சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் 7,064 வீடுகள் விற்பனையாகி உள்ளதாகவும் இதில், கிரெடாய் உறுப்பினர்களின் திட்டங்களின் மூலம் 6,097 வீடுகள் விற்பனையாகி உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
சிமென்ட் விலை 28%, செங்கல் விலை 12% உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சதுர அடிக்கான குறைந்தபட்ச கட்டுமான செலவு 2,000 ரூபாயில் இருந்து 2,300 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வு, அதிகபட்ச பதிவுக் கட்டணம், ஜிஎஸ்டி ஆகியவற்றால் ஏற்படும் சுமைகள் அதிகரித்துள்ளன.
இதனால் வீடுகளின் விலை உயர்த்தப்பட உள்ளது என்றார் சிவகுருநாதன்.
கடந்த 2017இல் ஒரு கிலோ 37 ரூபாய்க்கு விற்ற கட்டுமானக் கம்பிகள் விலை தற்போது 82 ரூபாயாக உயர்ந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

