மூங்கில் கூடை கூடையாய் நன்மை தரும் என்கிறார் சிற்பி சனிக்கிழமை ஒரு சாமானியர்

மூங்கில் கூடை கூடையாய் நன்மை தரும் என்கிறார் சிற்பி சனிக்கிழமை ஒரு சாமானியர்

4 mins read
9ff3892d-2a86-4382-a630-c5953398042f
திருமணத்தில் சாதம் வடிக்க பயன்படுத்தப்படும் கூடை. -
multi-img1 of 3

ஏதா­வது ஒரு தொழில் தெரிந்­திருக்­க­ வேண்­டும். அந்­தத் தொழில் மனி­த­னுக்­கும் சுற்­றுச்­சூ­ழ­லுக்­கும் நன்­மை­செய்­வ­தாக இருக்­க­வேண்டும் என்­கி­றார் திரு செல்­வ­ராஜ் என்ற 55 வயது ஆட­வர்.

தன்னை மூங்­கில் தொழில் சிற்பி என்று குறிப்­பிட்ட இவர், மூங்­கில் மரத்தை வாங்கி அதை உடைத்து செதுக்கி இழைத்து மனி­த­னுக்கும் விலங்­கு­க­ளுக்­கும் பெரிதும் பயன் படும் பொருள்­க­ளாக உரு­வாக்கி அவற்றை விற்று வாழ்கிறார்.

"என் தந்தை தலை­முறை முதற்­கொண்டு இதே இடம்­தான், இதே தொழில்­தான். பள்­ளிக்­கூ­டம் சென்று படிக்­காத என் தந்தை, என்னை படி படி என்று படித்துப் படித்து சொன்­னார். எனக்­குப் படிப்பு ஏற­வில்லை. ஆனால் என் தந்­தை­யி­டம் இருந்து கைவேலை என்னைத்­ தொற்­றிக்கொண்­டு­விட்­டது. மூங்கில் வேலையை அவ­ரி­டம் இருந்து கற்­றுக்­கொண்­டேன்.

"கண்­ணி­ய­மாக பிழைக்க அது­தான் வழி என்று முடிவு செய்­தேன். நினைவு தெரிந்த நாள் முதல் இது தான் என் தொழில்," என்று, கஞ்சா நக­ரம் என்ற கிரா­மத்­தில், சாலை ஓரம் உள்ள தன் வீட்டிற்கு வெளியே மூங்­கில் கூடை­யைப் பின்னி­ய­படியே சொன்­னார் செல்­வ­ராஜ்.

கஞ்­சா­ந­க­ரம், மயி­லா­டு­துறை பூம்­பு­கார் வழித்­த­டத்­தில் உள்ளது.

"இளம் மூங்­கில் வேலைக்கு அவ்­வ­ள­வாக ஒத்­து­வ­ராது. முற்­றிய கழி­யாகப் பார்த்து வாங்­கு­வேன்.

"மூங்­கில் கழி 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விலைக்­குக் கிடைக்­கும். அதைக் கூடை என்­றால் கூடைக்­குத் தகுந்­தாற்­போல், முறம் என்­றால் அதற்­குத் தகுந்­தாற் போல் அரி­வா­ளால் பிளந்து இழைத்து அகனி, மட்டை, சும்­பு­வாக ஆக்­கிக்கொண்டு பிறகு பின்னத் தொடங்­கு­வோம்.

"என் மனைவி சாந்­தி­யும் என்னைப் போல் மூங்­கில் தொழில் சிற்பி. இரு­வ­ரு­மாக கைத்­தொ­ழில் மூலம் கண்­ணி­ய­மாக காலம் கழிக்­கி­றோம்," என்று அவர் கூறி­னார்.

"கூடை, சாதம் வடி­க்கும் கூடை, கோழிக்­கூடை, முறம், ஏணி, தட்டு­கள், அலக்கு, துடைப்­பம், வாய்ப்­பெட்டி (நாய், மாடு வாயை மூடும் மூங்­கில் மூடி), கைவினைப் பொருள்கள் உள்­ளிட்ட பல­வும் உரு­வாக்கி விற்­கி­றேன்.

"கூடை ரூ. 300 விலை போகும். ஏணி உய­ரத்­திற்கு ஏற்ப ரூ. 1,000 வரை விற்­பேன். பாதிக்குப் பாதி லாபம் கிடைக்­கும். நாளுக்­குச் சரா­ச­ரி­யாக ரூ.500 சம்பாதிக்­கிறேன். கடன் இன்றி காலம் ஓடு­கிறது. ஒரு கூடை பின்னி முடிக்க மூன்று மணி நேரம் ஆகும். ஒரு நாளில் இரண்டு பின்னலாம்.

"எனக்கு கோபால் என்ற ஒரே மகன். என் மகன் கன­ரக வாகனம் ஓட்­டு­கி­றான். இந்த வேலை அவனுக்கு ஒத்துவர­வில்லை," என்­றார் செல்­வ­ராஜ்.

நான் சென்று அவ­ரைச் சந்­தித்­த­போது ஒரு கோழிக் கூடையைப் பின்னிக்­கொண்டு இருந்­தார்.

"வீட்­டில் கோழி வளர்ப்­ப­வர்­கள் கோழி ஓடி­வி­டா­மல் இருப்­ப­தற்­காக இர­வில் கோழி மீது கூடை­யைக் கவிழ்த்து மூடி­வி­டு­வார்­கள். அத்­தகைய கூடை காற்­றோட்­டம் அதி­கம் இருப்­ப­தாக இருக்க வேண்­டும்.

"ஆகை­யால் அத்­த­கைய கூடை ஒற்­றைப் பின்னல் கூடை­யாக இருக்­கும். வீட்­டில் பயன்­ப­டுத்­தும் கூடை­கள், முறம் எல்­லாம் இரட்டைப் பின்னல் கொண்­ட­வை.

"கூடை­யில் நடு நடுவே செங்குத்­தாக இருப்­பவை 'பட்­டை­கள்'. அவற்றின் ஊடே மாற்றி மாற்றிப் போட்டு இழுத்து பின்னப்­ ப­டு­ப­வை­தான் 'சும்பு'. அடி­யில் வலு­வுக்­காக தட்­டு­போல் இருப்­பவை 'அகனி' எனப்­படும். திரு­ம­ணத்­தில் சாதம் வடிக்க மூங்­கில் கூடை­யைத்­தான் பயன்­படுத்­து­வார்­கள். அவை ஒற்றைப் பின்னல் கூடை­கள்.

"அதே­போல் கோயில் குடமுழுக்­கின்­போது சீர்வரி­சை­க­ளுக்­கும் கல­சங்­களில் புனித நீர் ஊற்­று­வதற்­கும் மூங்­கில் கூடை­கள் அவ­சி­யம்.

"வீட்­டில் தண்­ணீரில் புழங்­காமல் பயன்­படுத்தப்படும் மூங்­கில் முறம், கூடையைச் சாணம் கொண்டு பூசி மெழுகி வைத்­துக்கொண்­டால் ஆண்­டுக் கணக்­கில் உழைக்­கும். மூங்­கில் ஏணிக்கு நிறம் அடித்து வைத்­துக்­கொள்­ள­லாம்," என்று செல்­வ­ராஜ் விளக்­கி­னார்.

"இப்­போ­தெல்­லம் மக்­கள் பிளாஸ்­டிக் போன்­றவை பக்­கம் சாய்ந்துவிட்­டார்­கள். அவை வசதி­யாக இருக்­க­லாம். ஆனால் அவை நல்­ல­தல்ல. உடல் நல­னுக்கு அவை எல்­லாம் கெடு­தல். அதோடு, சுற்­றுப்­பு­றத்­தி­ற்­கும் அவை நல்­ல­வை­யா­கத் தெரி­ய­வில்லை.

"ஆனால் மூங்­கில் அப்­படி அல்ல. இனிதான புல்­லாங்­கு­ழல் போன்ற இசைக் கருவிகள் முதல், இங்கே உயிர் போன மனி­த­னின் உட­லைச் சுமக்­கும் படுக்கைவரை மனிதனுடன் கடை­சி­வரை மூங்­கில் வரு­கிறது.

"மூங்­கில் குத்தாக வளரும். தனி மூங்­கில் மரம் கிளை விடாது.

"ஆனால் பல விழுது­களைக் கொண்ட ஆலமரம் போல் பெருகி குடும்­பம் குடும்­பமாக உடல் நலனுடன் மக்­கள் வாழ பல வழி­களில், வடிவங்­களில் மூங்­கில் உதவு­கிறது.

"மூங்கில் குருத்தை சிலர் உண­வாக உண்பதுண்டு. மூங்­கில் பல வழி­களில் உறு­து­ணை­யாக இருந்து உத­வு­கிறது. மனி­தன் இயற்கை யோடு இணைந்து வாழ வேண்டும். அதற்கு அவர்­களின் மனப்­போக்கு மாற வேண்­டும்.

"ஆகை­யால் மூங்­கில் பயன்­பாடு மேலும் அதி­க­ரிக்க வேண்­டும்," மூங்­கி­லால் ஆன பொருள்­களை மக்­கள் அதி­கம் பயன்­ப­டுத்த வேண்டும். நான் செய்­யும் மூங்­கில் தொழிலுக்கு அர­சு ஊக்கமூட்ட வேண்­டும்," என்று கூடையைப் பின்னியபடியே செல்­வ­ராஜ் கேட்டுக்­கொண்­டார்.

மனித வாழ்க்கையில் மூங்கிலுக்கு முக்கிய இடம் உண்டு என்று சொல்லும் செல்வராஜ், 55, மூங்கிலை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பல்வேறு பயன்பாட்டுப் பொருள்களை உருவாக்கி விற்கிறார். 'நான் சுற்றுச்சூழல் தோழன்' என்கிறார்.

மயிலாடுதுறை- பூம்புகார் சாலையில் உள்ள கஞ்சாநகரம் என்ற கிராமத்தில் தன் வீட்டுக்கு வெளியே சாலை ஓரமாக கோழிக்கூடை பின்னும் திரு செல்வராஜ், வாடிக்கையாளர் ஒருவரிடம் பேசுகிறார். ஒற்றைப் பின்னல் கூடை ஒன்றைப் பின்னி முடிக்க சுமார் மூன்று மணி நேரம் ஆகும் என்கிறார். இவர் உருவாக்கும் கூடைகள், தட்டுகள் திருமணம், கோயில் குடமுழுக்கில் பயன் படுத்தப்படுகின்றன.

செய்தி&

படங்கள்:

எம் கே. ருஷ்யேந்திரன்

மூங்கில் தயாரிப்புகள் எல்லாமே மனிதனுக்கும் இயற்கைக்கும் பெரிதும் உதவுபவை. என் வாழ்க்கையில் மூங்கில்தான் ஏணியாக இருக்கிறது. வாழும்போது மட்டுமன்றி, இங்கே மனிதன் உயிர்போன பிறகும் உடலோடு உடன் செல்வது மூங்கில். மூங்கிலும் மூங்கில் தொழிலும் எதிலும் துணை நிற்கும்.

செல்வராஜ், 55.