புதுக்கோட்டை: அண்மையில் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 4ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறி, அந்நாட்டு கடற்படை கைது செய்தது. இதே போல், கடந்த 11ஆம் தேதியும் ஆறு மீனவர்கள் கைதாகினர்.
இந்நிலையில், கைதான 11 பேரும் இலங்கையில் உள்ள ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை விடுதலை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
எனினும், அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் மீண்டும் கடல் எல்லையைக் கடந்து வந்து மீன்பிடித்தால் 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மீனவர்களின் இரு படகுகளும் அரசுடைமை ஆக்கப்படும் என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

