ஒட்டன்சத்திரம்: சாலையில் மனம் போன போக்கில் சுற்றித்திரியும் மனநோயாளிகளை மீட்டு, அவர்களுக்கு நிஷார் சேட் என்பவர் ஆதரவளித்து வருகிறார்.
மக்கள் கூட்டம் அதிகமுள்ள நகரங்களில் போக்குவரத்தைச் சரிசெய்வது, ஆதரவற்றவர்களைக் கண்டுபிடித்து, அவர்களை மனநலக் காப்பகங்களில் அடைக்கல மாகச் சேர்ப்பது என கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த நிஷார் சேட், 55, வாழ்ந்து வருகிறார்.
இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் தனது இருசக்கர வாகனத்தில் சென்று, சாலையோரங்களில் அழுக்கான ஆடைகளுடன் சுற்றித்திரியும் மனநோயாளிகளை மீட்டு, அவர்களின் தலைமுடியை மொட்டை அடித்து, குளிக்க வைத்து புத்தாடைகளை அணிவித்து விடுகிறார்.
இதன்பிறகு அவர்களை மன நலக் காப்பகத்தில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துவருகிறார். திருவனந்தபுரம், திருச்சி, ராமேஸ்வரம், ஏர்வாடி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட மனநோயாளிகளை மீட்டு, நல்வழிப்படுத்தி உள்ளார். "பல ஆண்டுகளாக முழுநேரமாக இப்பணிகளைச் செய்து வருகிறேன். இது எனக்கு மனநிறைைவத் தருகிறது," என்கிறார் நிஷார் சேட்.

