திருவொற்றியூர்: கணவரை விட்டுப் பிரிந்து தோழியின் வீட்டில் அடைக்கலமான இளம்பெண்ணின் கருமுட்டையை விற்று பணம் சம்பா திக்க முயன்ற கணவனும் மனைவி யும் கைது செய்யப்பட்டனர். இவ் விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை எர்ணாவூரைச் சேர்ந்தவர் விஜய். பெரும் ரவுடி. இவரது மனைவி ஷ்ருதி, 22. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில், குடும்பச் சண்டை காரணமாக கணவரை விட்டுப் பிரிந்து சென்றார் ஷ்ருதி. திரு வொற்றியூரில் வசிக்கும் தனது தோழி ஐஸ்வர்யாவின் வீட்டில் அடைக்கலம் புகுந்தார்.
ஐஸ்வர்யாவும் அவரது கணவர் சூரஜ் என்ற ஜெனிஸ் கண்ணாவும் தொடக்கத்தில் ஷ்ருதியை நல்ல முறையில் கவனித்துக்கொண்டனர். ஆனால், நாள்கள் செல்லச் செல்ல ஒரு வேலைக்காரியைப் போல் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஷ்ருதியிடம் "கருமுட்டையை விற்றால் ரூ.20,000 வரை கிடைக்கும்," என்று கூறி தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்று விசாரித்தபோது கருமுட்டை பெற ரூ.40,000 வரை பணம் தருவதாகக் கூறியுள்ளனர்.
கடைசி நேரத்தில் தனது மனதை மாற்றிக்கொண்ட ஷ்ருதி, கருமுட்டை கொடுக்கமாட்டேன் என்று சண்டை போட்டுள்ளார்.
இதனால், மீண்டும் அவரை வீட்டுக்கு அழைத்து வந்து, அடித்து உதைத்து துன்புறுத்தி உள்ளனர். இதைப்பற்றி சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்துள்ள தனது கணவர் விஜய்க்கு ஷ்ருதி குறுஞ்செய்தி அனுப்பினார். அவர் திருவொற்றியூர் காவல் நிலை யத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து தம்பதி கைதாகினர்.

