மதுரை: வரி ஏய்ப்பு புகாரின் பேரில் அரசு ஒப்பந்ததாரர்கள் இருபது பேரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.
மதுரை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றதாகவும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் பல ஆண்டுகளாக தங்களுடைய வருமான வரிக் கணக்குகளை முறைப்படி தாக்கல் செய்யவில்லை என்றும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
வருமான வரித்துறையின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இருபது பேரும் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக அரசின் பணிகளை செயல்படுத்தி வரும் முதல்நிலை அரசு ஒப்பந்ததாரர்கள் ஆவர். பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை சார்ந்த பணிகளைச் செய்து வருகின்றனர்.
இந்தப் பணிகளுக்காக அரசு நிர்ணயிக்கும் திட்ட மதிப்பீட்டில் குறிப்பிட்ட தொகையை இந்த ஒப்பந்ததாரர்கள் வருமான வரியாகச் செலுத்த வேண்டும் என்பது விதிமுறை. எனினும் முதல்நிலை ஒப்பந்ததாரர்கள் அதை மீறிஉள்ளனர். இவர்களில் சிலர் பல ஆண்டுகளாக வருமான வரி செலுத்தவில்லை என்றும் சிலர் பல்வேறு தகவல்களை மறைத்து, மிகக் குறைவான தொகையை வரியாகச் செலுத்தி உள்ளனர் என்றும் புகார் எழுந்துள்ளது.
இவர்களுடன் தொடர்புடைய சில நிறுவனங்கள் வரி செலுத்தவில்லை என்பதுடன், போலியாக கணக்கு விவரங்களைக் காண்பித்து, வருமான வரிச்சலுகை பெற்றுள்ளனர் என்றும் வருமானவரித்துறை சாடியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் இந்த ஒப்பந்ததாரர்கள் பல்வேறு வகையிலும், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தெரியவந்ததை அடுத்து, வருமான வரித்துறையினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த முதல்நிலை அரசு ஒப்பந்ததாரர் ஒருவரது வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது பல கோடி மதிப்புள்ள ரொக்கப் பணம், சொத்து ஆவணங்கள் ஆகிவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவருடன் தொடர்புள்ள நிறுவனங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, அடுத்தக்கட்ட நடவடிக்கையாக நேற்று காலை முதல் மாலை வரை மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மேற்குறிப்பிட்ட அரசு ஒப்பந்ததாரர்களுடன் தொடர்புடைய இடங்களிலும் அதேபோன்ற சோதனை நடத்தப்பட்டது. இதில் அறுபதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.
நேற்று மாலை வரை நீடித்த சோதனை நடவடிக்கையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள், ரொக்கப்பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. தேவைப்பட்டால் சில இடங்களில் இன்றும் சோதனை நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.
ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள், ஆவணங்கள் குறித்து அதிகாரபூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும் என வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழக அரசின் பல்வேறு பணிகளை ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் பெற்றுச் செயல்படுத்தி வரும் ஒப்பந்ததாரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மதுரை, திண்டுக்கல்லைச் சேர்ந்தவர்கள்; கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு எனப் புகார்

