சென்னை: தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள போதை பாக்குகள் உள்ளிட்ட குட்கா பொருள்களை முறைகேடாக விநியோகித்தது, விற்பனை செய்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் பலகோடி ரூபாய் லஞ்சத்தொகையாக கைமாறியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்புக்கு கடிதம் எழுதியுள்ள சிபிஐ, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரியுள்ளது. குட்கா ஊழல் வழக்கில் தொழிலதிபர் மாதவராவ், மூன்று அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஆறு பேர் இதுவரை கைதாகி உள்ளனர்.
ஆறு பேர் மீதும் சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், குட்கா வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.
குற்றவாளிகள் மீது மேலும் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சிபிஐ வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் ரமணா, காவல்துறை முன்னாள் டிஜிபிக்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட சில அதிகாரிகளுக்கும் சிக்கல் எழுந்துள்ளது.
அண்மையில் இவர்களுடைய வீடுகளில் சிபிஐ தரப்பு அதிரடிச் சோதனை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக தற்போது இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு இதற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், உடனடியாக விசாரணையை தீவிரப்படுத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

