திருச்சி: சென்னை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட 25 இடங்களில் தேசிய புலனாய்வு முகவை (என்ஐஏ) அதிகாரிகள் நடத்திய சோதனையில் 57 கைபேசிகள், 68 சிம்கார்டுகள், கடவுச்சீட்டுகள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கேரள மாநிலம், விழிஞ்சியம் துறைமுகத்தில் கடந்த 2021ல் 300 கிலோ ஹெராயின், 1,000 துப்பாக்கி தோட்டாக்கள், 5 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தச் சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, தமிழகத் தலை நகர் சென்னை, திருச்சி உள்ளிட்ட 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டுக் கைதி களுக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 15 பேரிடம் 13 மணி நேரம் விசாரணை நடந்தது.
முகாமில் உள்ள குணா என்பவரின் கார் ஓட்டுநராக இருந்த விக் ேனஷ் வீட்டிலும் இச்சோதனை நடைபெற்றது.
இலங்கை போதைப்பொருள் கும்பலின் முக்கிய புள்ளிகளான குணசேகரன், புஷ்பராஜா ஆகியோர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜி சலீமுடன் சேர்ந்து போதைப்பொருள், ஆயுதங்களை அந்நாட்டில் இருந்து இந்தியா, இலங்கைக்கு கடத்தியதாக விசாரணையின்போது தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் என்ஐஏ அதிகாரி கள் நடத்திய சோதனையில், 57 கைபேசிகள், 68 சிம் கார்டுகள், இரு மடிக்கணினிகள், பணப்பரிவர்த்தனைக்கான ஆவணங்கள், இலங்கை கடவுச்சீட்டுகள் உள்ளிட்டவை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி சிறப்பு முகாமில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.252,000 ரொக்கம், 57 சவரன் தங்க நகைகள், முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, இந்தச் சோதனை பரபரப்பு அடங்குவதற்குள் அமலாக்கத்துறையைச் சேர்ந்த 4 டெல்லி அதிகாரிகள் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமிற்குள் அதிரடியாகச் சென்று நேற்று சோதனை நடத்தினர். வெளிநாட்டினரின் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடந்ததாகத் தகவல்.

