ராமநாதபுரம்: சேதமடைந்த கனியாமூர் தனியார் பள்ளியில் படித்து வந்த 4,000 மாணவர்களுக்கு, அந்தப் பள்ளியின் அருகில் உள்ள மற்ற பள்ளிகளில் வைத்து பாடங்களை நடத்த ஏற்பாடு செய்து வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் கல்லூரி நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "கனியாமூர் பள்ளியில் படித்து வந்த மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதால், பாதிக்கப்பட்ட பள்ளியின் அருகிலுள்ள அரசு, தனியார் பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் வகுப்புகளை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மரத்தடியில் கல்வி கற்பிக்கும் 2,500 பள்ளிகளுக்கு விரைவில் கட்டடங்கள் கட்டித் தரப்படும். பழுதடைந்த 10,031 பள்ளி கட்டடங்களை இடிக்க உத்தர விடப்பட்டுள்ளது," என்றார்.

