தூத்துக்குடி: பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் வகையில், 74 கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசியப் பொருள்கள் தமிழக அரசின் சார்பில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
ஏற்கெனவே ெசன்ைனயில் இருந்து ஒரு கப்பலும் தூத்துக்குடியில் இருந்து மற்றொரு கப்பலும் இலங்கை சென்றடைந்தன.
இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து மூன்றாவது முறையாக 16,800 டன் அளவிலான நிவாரணப் பொருள்களுடன் கொழும்பு துறைமுகத்துக்கு கப்பல் புறப்பட்டுச் சென்றது.
இந்தக் கப்பலை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கொடியசைத்து அனுப்பிவைத்தார்.
தமிழகத்திலிருந்து 16,500 டன் அரிசி, 250 டன் ஆவின் பால் பவுடர், 50 டன் உயிர் காக்கும் மருந்துகள் என மொத்தம் ரூ.74 கோடி மதிப்பிலான 16,800 டன் எடையுள்ள பொருள்களுடன் மூன்றாவது கப்பல் நேற்று புறப்பட்டுச் சென்றது.
சென்னை துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் கடந்த மே மாதம் 18ஆம் தேதி முதல் கட்டமாக ரூ.30 கோடி மதிப்பிலான பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலம் ரூ.67.70 கோடி மதிப்பிலான 15 ஆயிரம் டன் எடையுள்ள பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப் பட்டன.
இந்நிலையில், நேற்று மூன்றாவது கட்டமாக நிவாரணப் பொருள்கள் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டன.
இந்த நிகழ்வில், அமைச்சர்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், பெ.கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

