ரூ.10,000 நிதியளித்த பிச்சைக்காரர்
ஆலங்கிணறு: தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் போல்பாண்டி, 72. ஊர் ஊராகப் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துபவர். தான் யாசகம் கேட்டு சேர்த்த ரூ.10,000 பணத்தை இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்குமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் வழங்கினார். "2010 முதல் பிச்சை எடுக்கிறேன். பல பள்ளிகளுக்கு மேசை, நாற்காலி, எழுது பொருள்கள், குடிநீர் வசதி செய்து கொடுத்துள்ேளன். இது தவிர கொரோனா, வெள்ள நிவாரண நிதி என 51 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கியுள்ளேன்," என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி, ரஜினி, கமல் வருகை
மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள சதுரங்கப் போட்டியை முன்னிட்டு அதிலுள்ள விளையாட்டுக் காய்களாக அலங்கரித்து நிற்கும் சென்னைச் சிறுவர்கள். படம்: இபிஏ
மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டி 14 நாள்கள் நடைபெற உள்ளது. இப்போட்டியைத் தொடங்கிவைக்க நாளை பிரதமர் மோடி சென்னை வரவுள்ளநிலையில், 6,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். போட்டியின் தொடக்கவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போட்டி நடைபெறும் பூஞ்சேரியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களுடன் ஆளில்லா வானூர்திகள் பறக்கவிடப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
யூக்கலிப்டஸ் மரங்கள் நட தடை
சென்னை: தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் என்ற தைல மரங்களை நடக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலத்தடி நீரை அதிகளவில் யூக்கலிப்டஸ் மரங்கள் உறிஞ்சுவதாக தெரிவித்த நீதிபதிகள் அமர்வு, எட்டு மணி நேரத்துக்குத் தேவையான நீரைத் தானே உறிஞ்சி எடுத்து ஆவியாக்கக்கூடிய இந்த வகை மரங்களை இனி நடக்கூடாது என உத்தரவிட்டனர்.
மாணவர்களுக்கு இருவகை ஏற்பாடு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி மாணவர்களுக்கு இன்றுமுதல் இணையவழியில் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் படித்துவரும் மாணவ, மாணவிகளுக்கு அடுத்த வாரம் முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

