சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4,800 கோடி நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வின் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் ஆர்.எஸ். பாரதி தரப்பில் அவகாசம் கோரப் பட்டதைத் தொடர்ந்து, இவ்வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதி மன்றம் உத்தரவிட்டது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கடந்த 2017 முதல் 2021 வரை முதல்வராக இருந்தார் பழனிசாமி.
இந்த காலகட்டத்தில் ரூ.4,800 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களை நெருங்கிய உறவினர்கள், நண்பர் களுக்கு அவர் வழங்கியதாக திமுக குற்றஞ்சாட்டியது. இதுகுறித்து, உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்குத் தொடர்ந்தார்.
கடந்த 2018ல் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், முதல்வராக இருந்த பழனிசாமி மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பழனிசாமி மேல்முறையீடு செய்தார்.
இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
அதன்பிறகு, நான்கு ஆண்டுகளாக இவ்வழக்கு நிலுவையில் இருந்துவந்தது.
இந்நிலையில், இவ்வழக்கை விரைந்து விசாரிக்கும்படி தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் தமிழக அரசு தரப்பில் நேற்று முன்தினம் முறையிடப்பட்டது.
இதையடுத்து, பழனிசாமி மீதான முறைகேடு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு நீதிமன்றம் விசா ரணையை ஒத்திவைத்தது.
பழனிசாமி மீதான ஒப்பந்த முறைகேடு வழக்கு, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஆகி யன மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளதால், அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள அவருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
இதனிடையே, கடந்த 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் சட்டவிதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரியும் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை வியாழக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளதால் பழனிசாமிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

