திருப்பூர்: தமிழ்நாட்டில் பள்ளிக்கூட மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பெரியளவில் ஆலோசனை சேவை திட்டம் விரைவில் தொடக்கவிருப்பதாக அந்த மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
அந்தத் திட்டத்தின் கீழ், மாநிலத்தின் ஒவ்வோர் ஒன்றியத்துக்கும் இரண்டு மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
அவர்கள் மாணவர்களுக்குப் பல வழிகளிலும் ஆலோசனை கூறி தன்னம்பிக்கையை ஏற்படுத்துவார்கள் என்று திருப்பூரில் அளித்த பேட்டியில் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்திட்டத்தின்படி, மாநிலத்தின் கல்வி ஒன்றியம் 413 பகுதிகளாக பிரிக்கப்படும். ஒவ்வோர் ஒன்றியத்துக்கும் நியமிக்கப்படும் மருத்துவர்கள், தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களுக்குச் சென்று மாணவர்களுக்கு ஆலோசனை கூறி உதவுவார்கள்.
திட்டத்தில் மொத்தம் 800 மருத்துவர்கள் உட்படுத்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மாணவர்கள் மனமுடைந்து உயிர்மாய்ப்பு காரியங்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில் அமைச்சரின் இந்த அறிவிப்பு இடம்பெறுகிறது.
அண்மைய நாள்களில் மாநிலத்தில் மொத்தம் ஐந்து மாணவர்கள் மனஉளைச்சல் காரணமாக தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், மாணவர்களிடம் தன்னம்பிக்கையைப் பலப்படுத்தும் மற்றொரு முயற்சியாக, மாணவர்களிடம் உள்ள விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு நாட்டமான திறமைகளில் பயிற்சி அளித்து, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அவர்கள் பங்கேற்க உதவும் திட்டம் கட்டம் கட்டமாக நடப்புக்கு வருகிறது என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

