ஈரோடு: தீவிரவாத தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஈரோட்டைச் சேர்ந்த இரண்டு இளையர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி முடித்துள்ள நிலையில் இருவர் மீதும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் வழக்குப்பதிவாகி உள்ளது.
ஆசிப் முசாப்தீன், யாசின் என அடையாளம் காணப்பட்டுள்ள இருவருக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், மாணிக்கம்பாளையம் பகுதியில் அண்மையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். அங்குள்ள ஒரு வீட்டில் இருந்தவர்கள் விசாரிக்கப்பட்டனர்.
உள்ளூர் காவல்துறையின் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த விசாரணை நள்ளிரவு வரை நீடித்தது. அதன் முடிவில் அந்த வீட்டைச் சேர்ந்த இளையர் ஒருவர் மட்டும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில், அதேபகுதியைச் சேர்ந்த அவரது நண்பரான இன்னொரு இளையரும் சிக்கினார்.
மேலும் மாணிக்கம்பாளையத்தில் உள்ள இளைஞரின் குடும்பத்தார் வசித்து வரும் பகுதியில் ஈரோடு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அந்த இளையரைத் தேடி யாரெல்லாம் வந்து சென்றனர், அவர்களின் நடவடிக்கைகள் என்ன என்பன குறித்தும் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இருவர் மீதும் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பாயந்துள்ளது.
எனினும் இருவரிடமும் விசாரணை நீடித்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

