சென்னை: மரங்களின் பண்புகளுக்கு நேர்மாறானக் குணங்களைக் கொண்டுள்ள யூகலிப்டஸ் மரம், சீமைக்கருவேல மரம் போன்ற அந்நிய மரங்களை தமிழக மண்ணிலிருந்து அகற்ற வேண்டியது பேரவசியமாகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் வலியுறுத்தி உள்ளார்.
கேரள மாநிலத்தில் வளம் கொழிப்பதற்கும் இயற்கையின் பசுஞ்சோலையாகக் காட்சியளிப்பதற்கும் அம்மாநிலத்தை ஆளும் அரசுகளின் இயற்கை நலன் குறித்தானப் பெருத்த அக்கறையே முதன்மைக் காரணம் என்று குறிப்பிட்டுள்ள அவர், மேலை நாடுகளில், மரங்களைப் பராமரிப்பதற்கென்றே 'மர மருத்துவர்கள்' எனும் ஒரு பிரிவை உருவாக்கி வைத்திருப்பதாகச் சுட்டிக்காட்டி உள்ளார்.
நிலத்தடி நீர் வளத்தை உறிஞ்சி, காற்றிலுள்ள நீர்ச்சத்தையும் உறிஞ்சி, வறட்சியை ஏற்படுத்தும் தன்மை கொண்ட மரங்களின் பேயான சீமைக்கருவேல மரமும் சமூகநலக்காடுகள் எனும் பெயரில் திணிக்கப்பட்ட யூகலிப்டஸ் மரமும் நில வளத்தையும், நீர் வளத்தையும் முற்றாகப் பாதிப்பதாக அறிக்கை ஒன்றில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
"வர்தா புயல் தாக்குதலின்போது சென்னையிலுள்ள பெருவாரியான மரங்கள் முறிந்து விழுந்ததற்குக் காரணமும் அவை இம்மண்ணுக்குத் தொடர்பற்ற அந்நிய மரங்கள் என்பதேயாகும்.
"இம்மண்ணுக்கேற்ற மரங்களை நட்டு வளர்க்கும்போதுதான் பெருங்காற்றை எதிர்கொண்டாலும் அதைத் தாங்கும் திறனைக்கொண்டு அவை நிலைத்து நிற்கின்றன.
"அண்டை மாநிலமான கேரளாவில் மரங்கள் குறித்தான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, சீமைக்கருவேல மரங்களை மொத்தமாக அகற்றி, மண்ணுக்கேற்ற மரங்களையே நட்டு வளர்க்கிறார்கள்," என்று சீமான் தெரிவித்துள்ளார்.
நில வளம், நீர் வளம், மலை வளம், கடல் வளம், கனிம வளம் என இயற்கையின் சொத்துக்களை சூறையாடித் தின்பதை நோக்கமாகக் கொண்ட தமிழக ஆட்சியாளர்கள் அதுகுறித்த எந்தக்கவலையும் அக்கறையும் கொண்டிருப்பதாகத் தமக்குத் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், அந்நிய மரங்களை அகற்ற உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டிருப்பதை நாம் தமிழர் கட்சி வரவேற்பதாகக் கூறிஉள்ளார்.

