நாகை: அமெரிக்காவில் உள்ள ஓர் அருங்காட்சியகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த செம்பியன் மகாதேவி உலோகச் சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.
நாகப்பட்டினத்தில் உள்ள செம்பியன் மகாதேவி கிராமத்தில் தற்போது உள்ள சிலை போலியானது என்றும் தெரிய வந்துள்ளது.
அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய, சோழ வம்சத்தை சேர்ந்த பழமையான செம்பியன் மகாதேவி உலோகச் சிலையாகும்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கும் முன்பே இந்தச் சிலை மாயமானது. அதன் பிறகு சிலை என்னவானது, எங்குள்ளது என்பன போன்ற தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.
இதற்கிடையே, தமிழகத்தில் சிலைக்கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தன.
எனவே சிலைக் கடத்தலைத் தடுப்பதற்கு என்றே தமிழக காவல்துறையில் சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டது.
பொன்.மாணிக்கவேல் உட்பட பல அதிகாரிகள் இப்பிரிவுக்கு தலைமையேற்று மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் காரணமாக சிலைக் கடத்தல் குறைந்தது ஒருபக்கம் இருக்க, பல்வேறு நாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட அரிய சிலைகள் பலவற்றை மீட்கும் நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில், சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட அரிய உலோகச் சிலையை மீட்டு வருவதற்கான முயற்சிகள் தொடங்கி உள்ளதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

