சென்னை: இந்திய இளைஞர்கள் மீது உலகமே நம்பிக்கை வைத்து உள்ளது. இளைஞர்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி, மாணவ-மாணவியர்களின் கற்றலே இந்தியாவின் கற்றல். அவர்களது வெற்றியே இந்தியாவின் வெற்றி என பிரதமர் நரேந்திர மோடி பெரு மிதத்துடன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 42வது பட்டமளிப்பு விழா நேற்று நடைெபற்றது.
இவ்விழாவில், பிரதமர் மோடி கலந்துகொண்டு, 69 மாணவர்களுக்குப் பட்டங்கள், தங்கப்பதக்கங்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
"இந்தியாவில் ஒவ்வொரு துறையும் வளர்ந்து வருகிறது. கைபேசி தயாரிப்பில் கடந்த ஆண்டு இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தது. கடந்த ஆறாண்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட புதிய தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துள்ளது.
"தொழில் தொடங்க உகந்த மாநிலங்களின் தரவரிசையில் தமிழ்நாடு மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளது," என மோடி கூறினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, "கல்வி என்பது யாராலும் திருடமுடியாத சொத்து," என்று கூறியவர், மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் உயர்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி எனும் இலக்கை நோக்கி தமிழக அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
திமுக இயக்கத்தின் அடிப்படை கொள்கையே கல்விதான் என்றும் அவர் சொன்னார்.
"பட்டம்பெறும் மாணவர்கள் வேலைதேடுவோராக இல்லாமல் வேலை கொடுப்பவராக இருக்க வேண்டும்," எனக் கூறிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இருநாள் பயணமாக தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி, சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளையும் சார்ந்த தலைசிறந்த 69 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் நேற்று திருவள்ளுவர் சிலையைப் பரிசளித்தார்.
இளைஞர்களே நாட்டின் வளர்ச்சிக்கு உதவுபவர்கள். இந்திய இளைஞர்கள் மீது இவ்வுலகமே நம்பிக்கை வைத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி

