போபால்: மத்தியப் பிரதேசத்தில் தாதியாகப் பயிற்சி பெற்று வரும் கல்லூரி மாணவர் ஒருவர், பள்ளி மாணவர்கள் 39 பேருக்கு ஒரே ஊசியைப் பயன்படுத்தி தடுப்பூசி போட்டுள்ளார். இதையடுத்து மாணவர் கைதானார்
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்டத் தடுப்பூசி அதிகாரியும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
"தவறு என் ேமல் இல்லை. தடுப்பூசி போடுவதற்கு என்னிடம் ஒரு ஊசி மட்டும்தான் தரப்பட்டது. இதை வைத்துதான் அனைவருக்கும் போடவேண்டும் என நினைத்து தடுப்பூசி போட்டுவிட்டேன்," என்று விளக்கம் அளித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், சாகர் நகரில் உள்ள ஜெயின் மெட்ரி குலேஷன் பள்ளியில் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் தடுப்பூசி போட்டு விடுவதற்காக ஒரு தனியார் தாதிமைக் கல்லூரி மாணவரான ஜிதேந்திர அஹிவார் என்பவரை மாவட்ட சுகாதார அலுவலகம் நியமித்திருந்தது.
அந்த இளையர், ஒருமுறை பயன்படுத்திய ஊசியை மாற்றாமலேயே அடுத்தடுத்து வந்த 39 மாணவர்களுக்கும் தடுப்பூசி போட்டுவிட்டுள்ளார்.
நீண்ட நேரத்திற்குப் பின்னரே அங்கிருந்த பெற்றோருக்கு இது தெரியவந்தது. பின்னர், அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், அதற்கு அலட்சியமாகப் பதிலளித்த இளையர், தனக்கு மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் ஒரு ஊசிதான் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

