மதுரை: அமெரிக்காவில் வசிக்கும் தன் காதலரைக் காணொளி வழி திருமணம் செய்துகொள்ள ஒரு பெண்ணுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்து உள்ளது.
மணமக்கள் திருமணம் செய்து கொண்டதற்கான சான்றிதழை சட்டப்படி வழங்கவும் சார் பதிவா ளருக்கு உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியைச் சேர்ந்தவர் வாஷ்மி சுதர்ஷினி. இவர், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ''நானும் ராகுல் எல்.மதுவும் காதலித்து வருகிறோம். இந்தியாவைச் சேர்ந்த ராகுல் தற்போது அமெரிக்காவில் குடி யுரிமை பெற்று வசித்து வருகிறார். என்னைத் திருமணம் செய்து கொள்வதற்காக அண்மையில் இந்தியாவுக்கு வந்திருந்தார்.
ஆனால், எவ்வித காரணமுமின்றி எங்களுக்குத் திருமணம் செய்து வைக்க மணவாளக்குறிச்சி சார் பதிவாளர் மறுத்துவிட்டார். ராகு லுக்கு கொடுக்கப்பட்டிருந்த விசா காலம் முடிவடைந்துவிட்டதால், அவர் அமெரிக்காவுக்குத் திரும்பிச் சென்றுவிட்டார். இதனால், நாங்கள் காணொளி மூலம் திருமணம் செய்துகொள்ளவும் எங்கள் திரு மணத்தை சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யவும் உத்தரவிடவேண்டும்,'' எனத் தெரி வித்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ''மனுதாரர் காணொளி வழி திருமணம் செய்ய எந்த சட்டத் தடையும் இல்லை. திருமணப் பதிவேட்டில் மனுதாரர் அவர் சார்பிலும் ராகுல் சார்பிலும் கையெழுத்திடலாம். பின்னர், சட்டப்படி திருமணப் பதிவுச் சான்றிதழ் வழங்கவேண்டும்,'' என்று உத்தரவில் கூறியுள்ளார்.
திருமணம் என்பது மனிதனின் அடிப்படை உரிமை. மனுதாரர்கள் தங்களின் திருமணத்தை இணையம் வழி செய்துகொள்ள தேர்வு செய்துள்ளனர். இதில் எவ்வித சட்டச் சிக்கலும் இல்லை என்பதால், அவர்களின் திருமணத்தை காணொளிவழி நடத்த அனுமதிக்கிறேன்.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

