மதுரை: மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணியைத் தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்த காணொளிகளும் வெளியாகி உள்ளன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளோடு நடைபெற்ற சண்டையில் மதுரை நகரைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன், 24, வீரமரணம் அடைந்தார்.
இவரது உடல் இரு நாட்களுக்குப் பிறகு நேற்று மதுரை விமான நிலையம் வந்து சேர்ந்தது.
லட்சுமணன் உடலுக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்திவிட்டு காரில் புறப்பட்டுள்ளார். அப்போது அங்கிருந்த பாஜகவினர் அவரது கார்மீது செருப்பை வீசித் தாக்கியுள்ளனர். அவர்களில் இரு பெண்களும் இருந்துள்ளனர்.
அரசின் சார்பாக அஞ்சலி செலுத்திய பின்னரே, பாஜகவினர் அஞ்சலி செலுத்தவேண்டும் என்று கூறியதால் பிரச்சினை ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டுக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்துள்ள ஒரு ராணுவ வீரரின் உடலுக்கு அமைதியாக இறுதி அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்வதை விட்டுவிட்டு, இப்படி இரு கட்சியினரும் சாலையில் சண்டை போட்டுக்கொண்டு நிலை மையை மோசமாக்கியது குறித்து சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

