சென்னை: சென்னை வங்கியில் 32 கிலோ தங்கம் கொள்ளை யடிக்கப்பட்ட சம்பவத்தில் வங்கி ஊழியரான முருகன் என்பவரை காவலர்கள் தேடி வருகின்றனர்.
அரும்பாக்கம் ரசாக் கார்டன் ரோட்டில் உள்ள தனியார் வங்கியான ஃபெடரல் வங்கியில் ஞாயிறு பட்டப்பகலில் ஊழியர்களைக் கட்டிப் போட்டு 32 கிலோ நகைகளை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றனர். இதன் மதிப்பு 20 கோடி ரூபாய் (S$ 3,443,601).
இவற்றை மீட்க காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கி உள்ளது. கொள்ளையர்கள் அறிமுகமானவர்கள் என நம்பப்படுகிறது. இதே வங்கியில் வில்லிவாக்கம் கிளையில் வேலை பார்க்கும் முருகன் என்ற ஊழியர் தலைமையில் கொள்ளை நடந்திருக் கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.
முருகன் பாடியைச் சேர்ந்தவர். தனிப்படை காவல்துறையினர் முருகனின் வீட்டுக்குச் சென்றபோது அங்கு அவர் இல்லை.
இதையடுத்து முருகனின் இருப்பிடம், அவர் யாருடன் தொடர்பு கொண்டார் என காவல்துறையினர் விசாரித்தனர். குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் சேகரித்த தகவலை வைத்து காவல்துறை முருகனைத் தேடி வருகிறது.
அவரது உறவினர் பாலாஜி என்பவருக்கும் இந்தக் கொள்ளையில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலாஜியை காவல்துறை விசாரித்து, அவர் கொடுத்த தகவலின்படி தனிப்படை ஒன்று திருவண்ணாமலைக்கு விரைந்துள்ளது.
இதுவரை ஆறு பேரை காவல்துறையினர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் காவல்துறைக்கு சில ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே கொள்ளைக் கும்பல் விரைவில் பிடிபடலாம் எனக் கூறப்படுகிறது.
கொள்ளையர்கள் வங்கிக்குள் புகுந்தது எப்படி என விசாரித்தபோது, பணியில் இருந்த காவலாளி சரவணன் என்பவருக்கு முருகன் குளிர்பானம் வாங்கிக் கொடுத்ததாகவும் அதை குடித்ததும் அவர் மயங்கி விட்டதாகவும் அதன் பிறகே கொள்ளையர்கள் வங்கிக்குள் புகுந்ததாகவும் தெரிய வருகிறது.