சென்னை: பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்லவிருக்கிறார்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல சட்ட மசோதாக் களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். இதன் தொடர்பில் ஆளுநரை அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றதுடன் அப்போட்டியை வெற்றிகரமாக நடத்தியதற்காக தமிழக அரசை பாராட்டியிருந்தார்.
இதற்கு மு.க. ஸ்டாலினும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இதையடுத்து பிரதமர் மோடிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே இப்போது அரசாங்க பணிகளில் இணைக்கமான சூழல் உருவாகி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் இம்மாதம் 16ஆம் தேதி (நாளை) முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவிருக்கிறார்.
இதற்காக நேரம் ஒதுக்கித் தரும்படி பிரதமர் அலுவலகத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமருடனான சந்திப்பில் ஆளுநரிடம் நிலுவையில் தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட பல சட்ட மசோதாக்கள் குறித்து முதல்வர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

