சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் உணவு விழாவில் அடுப்பு இல்லா சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்ற 1,100 மாணவர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு உணவு வகைகளைத் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளனர்.
சென்னை தீவுத்திடலில் வெள்ளிக்கிழமையிலிருந்து மூன்று நாள்களாக உணவு திருவிழா நடைபெற்று வருகிறது.
தமிழக உணவு பாதுகாப்புத்துறை ஆதரவுடன் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் இரண்டாவது நாளான நேற்று நொறுக்குத்தீனிகளுக்குப் பதிலாக சத்தான உணவுகளை தாமாகவே தயாரிக்கும் விதமாக அடுப்பில்லா சமையல் என்ற பெயரில் பல்வேறு உணவு வகைகளைத் தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 1,100 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
அவர்களுக்கு சிறுதானிய உருண்டை, ஃபுருட் சாலட், மசாலா பயிறு போன்ற பத்து வகையான உணவு வகைகளைத் தயாரிக்க பயிற்சி வழங்கப்பட்டது.
பின்னர் மாணவர்களே தின்பண்டங்களைச் செய்து அசத்தினர். 1,100 மாணவர்கள் ஒரே சமயத்தில் தயாரித்த உணவு நிகழ்ச்சி புதிய சாதனையாகக் கருதப்படுகிறது.
இந்த உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
உணவு வீணாகுவதை தடுக்க வேண்டிய வழிமுறைகள், எந்த வகை உணவுகளைச் சாப்பிடுவது நல்லது என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் இங்கு எடுத்துரைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாரம்பரிய உணவு வகைகள், உணவு சார்ந்த போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபயணம் ஆகியவை உணவு விழாவில் இடம்பெற்றன. நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

