கோவை: சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் 32 கிலோ தங்கநகைகள் கொள்ளைபோன நிலையில், இப்போது அந்த நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டு விட்டதாக காவல்துறை தெரி வித்துள்ளது.
முதல்கட்டமாக கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்து 18 கிலோ தங்கநகைகள் மீட்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து நடந்த கைது, மீட்பு நடவடிக்கைகள் மூலம் கொள்ளைபோன 32 கிலோ நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் உரிய நடவடிக்கைகளுக்குப் பின்னர் அனைத்து நகைகளும் வங்கியில் ஒப்படைக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே பாலாஜி, சந்தோஷ், சக்திவேல், முக்கிய குற்றவாளியான முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சூர்யா என்பவரை நேற்று தனிப்படை காவலர்கள் கைது செய்தனர்.
சென்னையில் நடந்த வங்கிக்கொள்ளையில் ஏழு பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ள நிலையில், ஐவர் பிடிபட்டுள்ளனர்.
எஞ்சிய இரு கொள்ளையர்கள் கோவையில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, அவர்களைப் பிடிக்க கோவைக்கு விரைந்துள்ளனர் தனிப்படை காவலர்கள்.

