சீர்காழி: சீர்காழியில் பாரம்பரிய நெல்திருவிழா நேற்று நடந்தது. இதில் 150 வகையான நெல்ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் மறைந்த நெல் ஜெயராமன் நினைவாக மாநில அளவிலான பாரம்பரிய நெல் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு 8ஆம் ஆண்டு அங்குள்ள ஒரு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 150க்கும் மேற்பட்ட பல்வேறு பாரம்பரிய நெல் வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த நெல் திருவிழாக் கண்காட்சியைக் காண இயற்கை விவசாயிகளும் ஆர்வலர்களும் திரண்டிருந்தனர்.
சிறுதானியங்கள், பழங்கள் ஆகியவற்றை மட்டும் வைத்து ரசாயனக் கலப்பின்றி ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிட்டனர். மேலும் இயற்கை விதைகள், மூலிகைச் செடிகள், இயற்கை உரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இயற்கை மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டிருந்தன. பாரம்பரிய அரிசி வகைகளால் தயாரிக்கப்பட்ட உணவுகள் வருகையாளர்களுக்கு வழங்கப்பட்டன.

