மாமல்லபுரம்: சென்னை, மாமல்லபுரத்தில் நடந்த அனைத்துலகப் பட்டம் விடும் விழா நேற்று முன்தினம் நிறைவுபெற்றது. மூன்று நாள்கள் நடந்த இந்தப் பட்டமிடும் விழாவில் ஏறக்குறைய 30,000 பேர் வருகை தந்து விதவிதமான வடிவங்களையும் அளவுகளையும் கொண்ட ஆயிரக்கணக்கான பட்டங்கள் பறக்கவிடப்படுவதைக் கண்டு ரசித்தனர்.
மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றுலாத்துறை மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் என்ற நிறுவனம் இணைந்து இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்து நடத்தின.
இதில் இந்தியா தவிர அமெரிக்கா, தாய்லாந்தில் இருந்து பங்கேற்ற கலைஞர்கள் பல்வேறு வண்ண வடிவங்களிலான பட்டங்களைப் பறக்கவிட்டனர்.
கடந்த 13ஆம் தேதி தொடங்கிய இந்த விழா நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இதில் 80க்கும் மேற்பட்ட பட்டம் விடும் கலைஞர்கள் பங்கேற்று ஆயிரக்கணக்கான பட்டங்களை பறக்கவிட்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று முன்தினம் ஆக அதிகமான பட்டங்கள் பறக்கவிடப்பட்டன.
14 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட திடலில் இந்த அனைத்துலகப் பட்டம் விடும் விழா கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் உணவுக் கடைகள், விளையாட்டுகள் உள்ளிட்ட கேளிக்கை நிகழ்ச்சிகளும் மாலையில் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
நாட்டின் 75ஆம் ஆண்டு சுதந்திர விழா மற்றும் விடுமுறை நாளையொட்டி பட்டங்களையும் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசிப்பதற்காக சென்னை, மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்திருந்தனர்.

