சென்னை: ஐஎஃப்எஸ் அனைத்துலக நிதி நிறுவன மோசடியில் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்த இரு முக்கிய நிர்வாகிகளைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவலர்கள் கைது செய்துள்ளனர்.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த தனியார் நிறுவனத்துக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 21 கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனத்தின் மீது தொடர்ந்து மோசடிப் புகார்கள் கூறப்பட்டு வந்தன.
இந்நிலையில், 21 இடங்களிலும் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவலர்கள் சோதனை நடத்தினர்.
நட்சத்திர தங்கும் விடுதிகளில் வாடிக்கையாளர்களைச் சந்தித்து ஒரு லட்சம் பேரிடம் ரூ.6,000 கோடி வரை வசூலித்துள்ளனர்.
ஒரு லட்சம் ரூபாய் கட்டினால் மாதம் 8,000 ரூபாய் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்தது தெரியவந்தது.
ஆனால், குறிப்பிட்டபடி, மாதந் தோறும் வட்டித் தொகையை முறையாக வழங்காமல் 1,000 கோடி வரை மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டக் கிளை இயக்குநர் மின்மினி சரவணன் ஏற்கெனவே கைதானார்.
இப்போது, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த குப்புராஜ், 40, ராணிப்பேட்டையை சேர்ந்த ஜெகநாதன், 34, ஆகிய கிளை இயக்குநர்களைக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.
ஒரேநாளில் இருவருக்கும் இடையே எட்டுகோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதால் இதை வைத்து அவர்களைப் பிடித்துள்ளதாகவும் காவலர்கள் கூறினர்.

